» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் ரூ.403.42 கோடி தொழில் முதலீடுகள் ஒப்பந்தம் : அமைச்சர் மனோ தங்கராஜ்
திங்கள் 11, டிசம்பர் 2023 10:08:01 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் ரூ.403.42 கோடி முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் அவர்களால் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில் சிறப்புற நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோட்டமாக மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட தொழில் மையம் சார்பாக, வடசேரி ஹோட்டல் சகானா கேஸ்டிலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாட்டினை பால்வளத்துறை அமைச்சர் த.தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதலீட்டாளர்களை பாராட்டி சிறப்பித்து பேசுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இலட்சிய கனவினை நோக்கிய பயணத்தின் ஒருபடியாக உலக முதலீட்டாளர்கள் மாநாடானது வருகின்ற ஜனவரி 2024ம் ஆண்டு 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை 100 சதவீதம் வெற்றியடைய செய்யும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெறும் பெருந்திரள் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் குறித்தான பெருந்திரள் கூட்டத்தில் 45 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் ரூ.403.42 கோடி முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நைலான் மீன்பிடி வலை, சிமெண்ட் செங்கல், பிளாஸ்டிக் பொருட்கள், முந்திரி பருப்பு, மரப்பொருட்கள், ஐஸ்பிளாக், அணிகலன்கள் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும், வாகனம் பழுதுபார்த்தல், மருத்துவமனை போன்ற சேவை நிறுவனங்கள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1600-க்கு மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக வழிவகை செய்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்த வரையில் பல்வேறு பழவகைகள் குறிப்பாக 40க்கம் அதிகமான வாழைப்பழங்கள், மா, பலா, மூலிகைகள், பயிர் வகைகள், சிறுதானிய வகைகள் அதிகம் விளையக்கூடிய நிலம் சார்ந்ததாகும். இத்தொழில்களை மேற்கொள்ளவும் முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.
மேலும் நமது மாவட்டத்தை பொறுத்த வரை உலகிலேயே முக்கடலும் சந்திக்கின்ற ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் என்பதில் நாம் அனைவரும் பெருமைகொள்வதோடு, நமது மாவட்டத்திற்குட்பட்ட மீன்பிடி தொழில் ஈடுப்பட்டுள்ள மீனவர்கள் போன்றோர் மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து உலகளவில் இலபகரமாக சந்தைப்படுத்த முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை வெற்றி பெற செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆ.பெர்பெட், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல்.பிரவீன் குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் (பொருட்கள்) அ.செந்தமிழ்செல்வன், மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் ம.கோபாலன், கன்னியாகுமரி மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சங்கரன் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அதிகாரி ஜெய பிராகாஷ், முதலீட்டாளர்கள், பெருவாரியான தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.