» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தகுதியான மாணவ மாணவியர்க்கு மிதிவண்டி விரைவில் வழங்கப்படும்: ஆட்சியர் உறுதி
சனி 9, டிசம்பர் 2023 4:23:16 PM (IST)
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவ மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் விரைவில் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் இன்று (09.12.2023) பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கண்காணிப்பு குழுவினர்யிடையே தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குவதை கண்காணிப்பதற்காக தொழில் நுட்பகுழு மற்றும் செயலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் விநியோகிப்பது சம்மந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினருடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்த புள்ளி விவரத்தின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 7,132 மாணவர்களுக்கும் மற்றும் 7,988 மாணவியர்களுக்கும் மிதிவண்டிகள் என மொத்தம் 15,120 மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில் தற்போது 1,392 மாணவிகளுக்கான மிதிவண்டிகள் பொருத்தப்பட்டு மாணவிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
மேலும் 5780 மாணவிகளுக்கான மிதிவண்டிகள் பொருத்துவதற்கான மையத்திற்கு தற்போது வரப்பெற்றுள்ளது. மாணவிகளுக்கு இம்மிதிவண்டிகள் விரைவில் வழங்கப்படும். மாணவர்களுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். என்பதை தெரிவித்து கொள்வதோடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தகுதியான மாணவ மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.
கலந்தாய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.பாலதண்டாயுதபாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பெர்பட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.