» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி மனு
வெள்ளி 8, டிசம்பர் 2023 11:39:17 AM (IST)
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி மனு அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் நான்கு வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்திற்காக நிலம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் எனவும், தற்போதைய தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட வேண்டும் எனவும் மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை வைத்தார்.
அவர் அளித்துள்ள மனுவில், நிறுத்தப்பட்டிருந்த நான்கு வழி சாலை பணிகள் மிகுந்த முயற்சிகளுக்கு பின் தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் விரைந்து நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தின் சுமுகமான முன்னேற்றத்திற்கு, இந்த திட்டத்திற்க்காக நிலம் அளித்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் உரிய தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டு நிலுவையில் வந்த மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் இழப்பீடு இன்னும் எனது தொகுதியை சேர்ந்த 10 கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை துறை இந்த இழப்பீடு வழங்க மறுத்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை ஒரு மக்கள் போராட்டமாக மாறி பணிகள் தடை பட வாய்ப்புள்ளது. ஆகவே அமைச்சர் அவர்கள் நெடுஞ்சாலை துறையை அறிவுறுத்தி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை மட்டுமே நான்கு வழி சாலை பணிகள் முடிவடையும் வரை மக்கள் பயணம் செய்ய உபயோகிக்கப்படும். விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்காக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் இந்த சாலை வழியாக கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த சாலை பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலையின் நிலைமை மேலும் மோசமானது. ஆகவே சம்பத்தப்பட்ட துறையை அறிவுறுத்தி பழுதடைந்த இந்த சாலையை விரைந்து செப்பனிட ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.