» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் கலந்தாய்வு

வியாழன் 30, நவம்பர் 2023 10:29:20 AM (IST)



குமரி மாவட்டத்தில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்தாய்வு நடத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் குறித்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்தாய்வு மேற்கொண்டு பேசியதாவது: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்படையில் கன்னியாக்குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் திங்கள் 22-ம் நாள் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக கண்டறியப்படும் மூன்று வகையான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் நோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

இவ்வனைத்து பரிசோதனைகளும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துக்கொள்ளலாம். சுகாதாரத்துறை அலுவலர்கள் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பயனாளர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு மையங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இப்பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றது. மாவட்டத்தின் அனைத்துப் பயனாளர்களையும் மூன்று வருடத்திற்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி 28-11-2023 ம் தேதி மகளிர் சுய உதவிக்குழு பொறுப்பாளர்களுக்கும் 29-11-2023 ம் தேதி பஞ்சாயத்து தலைவர்களுக்கும் திட்ட விளக்கவுரைவழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்குவார்கள். இவ்வழைப்பிதழ்களில் அருகாமையிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பெறப்பட்டவுடன் பரிசோதனை முகாமிற்குச் சென்று பரிசோதனைகள் செய்திட மாவட்ட நிர்வாகத்தின சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்பரிசோதனைகள் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனைகளிலும் உரிய பயிற்சிகள் பெறப்பட்டவர்களால் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பரிசோதனையின் முடிவில் புற்றுநோய் அறிகுறிகள் இல்லையெனில், மூன்று வருடத்திற்குப்பின் மறுபரிசோதனை செய்துக்கொள்ளலாம். பரிசோதனையில் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.

வளர்ந்த நாடு என்ற பட்டத்திற்கு நாம் தயாராகும் நிலையில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. பிற தொற்றா நோய்களைப்போல் ஆரம்ப நிலையில் கண்டறிதலே புற்றுநோயினை குணப்படுத்த சிறந்த வழிமுறை. இதன்மூலம் புற்றுநோயினால் வரும் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்கலாம்.
தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம், உலக அளவில் 

தொற்றா நோய்களுக்கு ஒரு முன்மாதிரியான திட்டமக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இத்திட்டத்தின் வெற்றி மக்களாகிய உங்களின் ஈடுபாட்டை சார்ந்துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திட மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கேட்டுக்கொள்கிறார்கள்.

இக்கூட்டத்தில் பொது சுகாaதாரப்பணிகள் துணை இயக்குநர் சு.மீனாட்சி, சூரியநாராயணன், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory