» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று சோனம் வாங்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் வாபஸ்!

வெள்ளி 24, ஜூலை 2026 11:12:52 AM (IST)

sonamfastfill.jpg

மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக்கொண்டார்.

நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் மேடான்டா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே. பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசின் உறுதிமொழிகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் பழச்சாறு அருந்தித் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

இது குறித்துச் சோனம் வாங்சுக் தனது 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில், "மத்திய அமைச்சர்கள் ஜே. பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக் 'அபெக்ஸ் பாடி' (Apex Body) அமைப்பின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்:

வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட செய்தி வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' தளத்தில், "சோனம் ஜி மருத்துவர்களின் அறிவுரைப்படி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, விரைவில் தனது உடல்நலத்தையும் எடையையும் மீட்டெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் பரிபூரண ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு அளித்த முக்கிய உறுதிமொழிகள்:

மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ மற்றும் பிற முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அரசு அளித்த உறுதிமொழிகளை வாசித்துக்காட்டிய மத்திய அமைச்சர் ஜே. பி. நட்டா கூறியதாவது: "டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றவர்கள் மீது வழக்குகள் ஏதும் பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்திய 'நீட்' (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பொருத்தமான இழப்பீடு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது."

வன்முறையைத் தவிர்க்க வேண்டுகோள்:

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாக வாங்சுக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், நாட்டில் தேவையற்ற அசம்பாவிதங்கள் அல்லது வன்முறைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் தனி காணொளி (Video) மூலம் விளக்குவேன். அதுவரை பொதுமக்கள் அனைவரும் நாட்டின் எந்தப் பகுதியிலும் வன்முறை ஏற்படாதவாறு அமைதி காக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

போராட்டத்தின் பின்னணி: தேர்வு முறைகேடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல், கல்வி முறையில் விரிவான சீர்திருத்தங்கள் மற்றும் மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையிலான போராட்டம் கடந்த ஜூன் 20 அன்று தொடங்கியது.

இப்போராட்டத்தில் ஜூன் 28 அன்று இணைந்த சோனம் வாங்சுக், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது எவ்விதப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், முதன்மைக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory