» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?

திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

ISrominister.jpg

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறியுள்ளதால், நடப்பு ஆண்டு விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் விதிகளை மாற்றித் தனியார் நிறுவனங்களும் விண்வெளித் திட்டங்களில் பங்கேற்கலாம் என கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இம்மாற்றத்தைத் தொடர்ந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆய்வில் களமிறங்கியுள்ளன. இந்நாட்கள் ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

வளர்ந்து வரும் தனியார் விண்வெளி நிறுவனங்களுக்குத் திறமையான விஞ்ஞானிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர். இதனால், பணியில் சேர்ந்த உடனே மிகப்பெரிய திட்டங்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு, இஸ்ரோவை விடப் பல மடங்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகைகளைத் தனியார் நிறுவனங்கள் அள்ளி வழங்குகின்றன. இதன் காரணமாகத் தன்னிச்சையாகச் சாதிக்கத் துடிக்கும் இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். இவர்களுடன் ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானிகள் சிலரும் தனியார் நிறுவனங்களின் ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து விலகியுள்ளனர். சமீபகாலமாக மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இது இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில் 25 சதவீதமாகும். 

இந்த அதிரடிப் பணியாளர்கள் வெளியேற்றத்தால் இஸ்ரோவின் நடப்பு ஆண்டு திட்டங்கள் கடுமையாகத் தாமதமாகியுள்ளதுடன், 10-க்கும் மேற்பட்ட விண்வெளித் திட்டங்கள் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளன.

இக்கட்டான சூழ்நிலைக்கு நடுவே, நடப்பு ஆண்டு இறுதிக்குள் 7 விண்கலங்கள், 6 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. 

குலசேகரப்பட்டினம் திட்டம் : மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடு!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதால், அங்கிருந்து சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஆய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இம்முக்கியத்துவமிக்க பணிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு முடிவுகளுக்கு மத்திய அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory