» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ரூ.4.1 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ ஆலோசனை!

வியாழன் 25, ஜூன் 2026 5:43:27 PM (IST)



இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்களை விரிவுபடுத்துவதற்காக 48 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.1 லட்சம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்சி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பிற்குப் பிறகு, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தங்களது பல்வேறு வணிகப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்காக 48 பில்லியன் அமெரிக்க டாலர் புதிய முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2030-க்குள் கூடுதலாக 13 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளதாக ஆண்டி ஜாஸ்சி தெரிவித்தார். இதன் மூலம், 2026-2030 காலகட்டத்தில் ஏஐ மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பிற்காக மட்டும் அமேசான் மேற்கொள்ளும் மொத்த முதலீடு 21 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும். 

இம்மாபெரும் முதலீட்டின் மூலமாக மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் அமேசான் தரவு மையங்களின் (Data Centers) திறன் பலமடங்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் ஏஐ மற்றும் கிளவுட் துறையில் முதலீடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உருவெடுக்கும்.

முதலீட்டுப் பின்னணி: கடந்த 2010 முதல் 2030 வரையிலான இருபது ஆண்டு காலத்தில் இந்தியாவில் அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மொத்த முதலீட்டு அளவு 88 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆண்டி ஜாஸ்சி பேசுகையில், தங்களது நிறுவனம் இந்தியாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இ-காமர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். 

மேலும், வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்குத் துணையாக நின்று, நாட்டின் நீண்டகால வளர்ச்சிப் பங்காளியாக அமேசான் செயல்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory