» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மதுவில் எலி மருந்து கொடுத்து 8 பேரைத் தீர்த்துக்கட்டிய சைக்கோ கொலைகாரன் - பகீர் தகவல்கள்!

வியாழன் 25, ஜூன் 2026 12:26:11 PM (IST)



சத்தீஸ்கரில் கடந்த நான்கு மாதங்களாக 8பேரை கொலை செய்த ராம் சகாய் ஜெய்ஸ்வால் என்ற நபரைப் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கார்வே கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சகாய் ஜெய்ஸ்வால் (46). இவர் தனது கடையில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி எலி மருந்தை வாங்கியுள்ளார். இந்த நச்சுத்தன்மை வாய்ந்த எலி மருந்தை முதலில் ஒரு நாய்க்கு வைத்துச் சோதித்துப் பார்த்துள்ளார். நாய் உடனடியாக இறந்ததைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட எதிரிகளைத் தீர்த்துக்கட்ட இதே எலி மருந்தை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வந்தனர். கடந்த ஜூன் 6-ஆம் தேதி கிராம மக்கள் இது குறித்துச் சந்தேகமடைந்து காவல் துறையில் முறைப்படி புகார் அளித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட சடலங்கள்:
வழக்கின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், ராய்ப்பூர் மருத்துவ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருந்த 7 பேரின் சடலங்களை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இதில் புத்ராம் ஜெய்ஸ்வாலின் உடல் ஏற்கனவே எரிக்கப்பட்டுவிட்டதால், மற்ற உடல்களின் டிஎன்ஏ மற்றும் உள்ளுறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன. அதில் அனைத்து உடல்களிலும் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசாரின் பிடியில் சிக்கிய ராம் சகாய், அற்பக் காரணங்களுக்காகத் தான் செய்த கொடூரக் குற்றங்களை ஒப்புக் கொண்டார். தன்னிடம் இலவசமாக மது கேட்டு மிரட்டியது, தேர்தல் முன்விரோதம், பொது இடத்தில் அவமானப்படுத்தியது, நிலத் தகராறு மற்றும் செய்வினை செய்ததாக எழுந்த சந்தேகம் போன்ற காரணங்களுக்காக இந்த 8 கொலைகளையும் செய்ததாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மகேத்ரு ராம் என்பவரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதற்காகவே அவருக்கு மதுவில் விஷம் வைத்துக் கொன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி, கார்த்திக் என்பவருக்கும் ராம் சகாய் விஷம் கலந்த மதுவைக் கொடுத்துள்ளார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்தவுடன் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இது குறித்துப் பலுடாபஜார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சர்மா கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள ராம் சகாய் ஜெய்ஸ்வால் மீது 8 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory