» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்பாகக் கட்சியினர் இன்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய அரசிற்கும் எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுப்புகளை (Barricades) அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமாங் சிங்கார் கூறியதாவது:    "மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இது தொடர்பாகக் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட அனுமதி கோரி மின்னஞ்சல் (E-mail) மூலம் கடிதம் அனுப்பியிருந்தோம்; ஆனால் அவர் எங்களைப் பார்க்க மறுத்துவிட்டார். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு இல்லையா? நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு அவர் மதிப்பளிக்க வேண்டும்."

தேர்தல் ஆணையம் அம்பலமாகிவிட்டது:

இந்த விவகாரம் குறித்துப் பேசிய வேட்பாளர் மீனாட்சி நடராஜன்: "தேர்தல் ஆணையம் தனது நடுநிலையை முற்றிலும் இழந்துவிட்டது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கும் மத்தியப் பிரதேச அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், வழக்கு விசாரணையின் போது மாநில அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகி நின்றதைக் காண முடிந்தது. இதன் மூலம் தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் யாருக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள் என்பது பொதுமக்கள் முன்னிலையில் அம்பலமாகிவிட்டது," என விமர்சித்தார்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான பின்னணி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பலத்தின் அடிப்படையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் எளிதாக வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. பாஜக தரப்பில் பொதுச் செயலாளர் தருண் சக், மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் உபரி வாக்குகளின் அடிப்படையில் 3-ஆவது வேட்பாளராக மகேஷ் கெவத் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

மறுபுறம், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மூத்த நிர்வாகி மீனாட்சி நடராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஹைதராபாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலுவையில் உள்ள ஒரு குற்ற வழக்கு குறித்த விவரம் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, தேர்தல் நடத்தும் அதிகாரி அவரது மனுவை நிராகரித்தார்.

இதனை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைச் சந்தித்து, "நீதிமன்றம் எந்தவொரு தண்டனையோ அல்லது பிடியாணயோ பிறப்பிக்காத நிலையில் வேட்புமனுவை நிராகரித்தது செல்லாது; அதனை ஏற்க உத்தரவிட வேண்டும்" என மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory