» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தலையீடு : மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

வியாழன் 23, ஏப்ரல் 2026 12:50:06 PM (IST)

மேற்கு வங்கத்தில் ஐ-பேக் (I-PAC) அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று தலையிட்டது அதிகார அத்துமீறல் என்றும், இது ஜனநாயகத்தைப் பேராபத்தில் ஆழ்த்தும் செயல் என்றும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் (ED) சோதனை நடத்தினர். அப்போது திடீரென அங்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த வளாகத்திற்குள் நுழைந்து சில முக்கியக் கோப்புகளைக் கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்த நீதிபதிகள் கூறியதாவது: "இது மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான சாதாரண மோதல் கிடையாது. ஒரு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் இடத்திற்கு, பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் நேரில் செல்வார் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இது அதிகாரத்தில் இருப்பவர் செய்த அப்பட்டமான அத்துமீறல்.

ஒரு மாநில முதல்வர் விசாரணையின் நடுவே தலையிட்டு ஜனநாயகத்தைப் பேராபத்தில் ஆழ்த்துவதை ஏற்க முடியாது. இதனை மத்திய-மாநில அரசு இடையிலான அரசியல் மோதலாகச் சித்தரிப்பதும் தவறானது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலவும் சமூக-அரசியல் சூழல் மிகவும் அசாதாரணமான ஒன்றாக உள்ளது. மாநிலத்தின் நடைமுறை யதார்த்தங்களை நீதிமன்றம் கவனிக்காமல் புறந்தள்ள முடியாது. ஏற்கனவே ஒரு வழக்கில் நீதிமன்ற அதிகாரிகளே பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். சட்ட ரீதியாக நீங்கள் நுணுக்கமான வாதங்களை முன்வைத்தாலும், மாநிலத்தில் நிலவும் சிக்கல்களைக் கண்டு நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனத் தெரிவித்தனர்..

இன்று தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தலையீடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory