» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் மாநில சட்டசபைக்கு நவ.6, 11ல் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிப்பு

திங்கள் 6, அக்டோபர் 2025 5:44:34 PM (IST)

பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணைய மேற்கொண்டது.

இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் பீகாருக்கு சென்றார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சிந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் சென்றனர்.

பீகாரில் தேர்தல் ஆணைய மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அங்கு சென்றனர். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலுக்கான தயார்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணைய அறிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43 கோடி, இதில் சுமார் 14 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். பீகார் தேர்தல் அமைதியான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும்.

அனைத்து அதிகாரிகளும் முற்றிலும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும். எந்தவொரு ஊடகம் அல்லது தளத்திலும் ஏதேனும் போலி செய்திகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்படும். போதைப்பொருள், மதுபானம் மற்றும் ரொக்க பரிவர்த்தனையைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கடுமையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். 

பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கு அக்டோபர் 10-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. முதல் கட்ட வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் அக்.17-ம் தேதி ஆகும். மனுக்களை திரும்பப்பெற அக்.20-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

2-ம் கட்ட தேர்தல்: அக்.13-ல் மனு தாக்கல்: பீகார் 2-ம் கட்ட தேர்தலுக்கு அக்.13-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 2-ம் கட்ட தேர்தலில் மனு தாக்கலுக்கு அக்.20-ம் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த நாள் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 2-ம் கட்ட தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப்பெற அக்.23-ம் தேதி கடைசி நாள் ஆகும். முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும் 2-ம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory