» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!

திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)



பீகார் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இறுதிச் சடங்குக்கு மாலையுடன் வந்த குற்றவாளியை, காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

பீகார் தலைநகர் பாட்னாவில் காந்தி மைதான் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, 'ட்வின் டவர்' பகுதியில், பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், பா.ஜ.,வில் முக்கிய பொறுப்பில் இருந்தார். தொழில் நிமித்தமாக வெளியே சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.வீட்டை ஒட்டிய, 'பனாச் ஹோட்டல்' அருகே, இரவு 11:30 மணிக்கு வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கோபாலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினார்.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் விரைந்து வந்து, துப்பாக்கி தோட்டா உள்ளிட்ட முக்கிய பொருட்களை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். கொலை வழக்கை பதிவு செய்த போலீசார், கோபால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கோபால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன், கோபாலின் தொழிற்சாலை வாசலில் அவரது மகன் குஞ்சன் கெம்கா, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இப்போது கோபாலும் அதேபோல் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், பாட்னாவில், கொலை செய்வதற்கு முன்பி, தல்தாலி பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு 3பேர் வந்துள்ளனர். பிறகு அதில் ஒருவர் கெம்காவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்குதான் கொலை நடந்துள்ளது. இந்த முக்கிய குற்றவாளி, ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 6ஆம் தேதி நடந்தது. இறுதிச் சடங்கின் போது, கெம்கா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மாலையுடன் வந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்புக் கேட்டிருந்த கோபால் கெம்கா, கடந்த வாரம் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரது குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory