» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
வியாழன் 29, பிப்ரவரி 2024 11:45:44 AM (IST)
மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் திண்டோரி மாவட்டம் ஷாப்புரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் திருமணத்துக்கு சென்றுவிட்டு 35-க்கும் மேற்பட்டோர் வேனில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியாகினர்.
மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், நிதியுதவியாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.