» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்-அமைச்சராக மோகன் யாதவ் பதவி ஏற்பு
புதன் 13, டிசம்பர் 2023 12:30:53 PM (IST)
மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்-அமைச்சராக மோகன் யாதவ் பதவி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 17-ந்தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 66 தொகுதிகள் கிடைத்தன. போபாலில் திங்கட்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்-அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ், அம்மாநில கவர்னர் மங்குபாய் படேலை சந்தித்து புதிய அரசை அமைக்க உரிமை கோரினார். அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து மோகன் யாதவ் மத்திய பிரதேச முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதற்கான விழா போபாலில் உள்ள லால் பரேட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.