» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல அனுமதியில்லை: கட்டுப்பாடுகள் முழு விபரம்!

திங்கள் 16, மார்ச் 2026 4:13:23 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வரும் மே 6-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு இயந்திரம் பின்பற்ற வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் வருமாறு :

1. பணப் பரிமாற்றம் மற்றும் ஆவணங்கள்:

பொதுமக்கள் தனிநபராக ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கையோடு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

உரிய ஆவணங்கள் (வங்கிக் கணக்கு விவரம், தொழில் சார்ந்த ஆதாரங்கள்) இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும்.

வாக்காளர்களுக்குப் பணம், மது அல்லது பரிசுப் பொருட்களை விநியோகிப்பது கடும் குற்றமாகும்.

2. அரசு மற்றும் அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்:

தமிழக அரசு இனி 'காபந்து அரசாக' மட்டுமே செயல்படும். புதிய திட்டங்களோ, சலுகைகளோ அறிவிக்கப்படக் கூடாது.

அமைச்சர்கள் அரசு வாகனங்களையோ, அரசு இயந்திரத்தையோ தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தாலும், தேர்தல் முடியும் வரை அவற்றைத் தொடங்கக் கூடாது.

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் புதிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

3. அரசு அதிகாரிகள் மற்றும் இணையதளங்கள்:

அரசு இணையதளங்களில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சாதனைகள் குறித்த தகவல்கள் நீக்கப்படும்.

அரசு அதிகாரிகள் அமைச்சர்களைச் சந்திப்பதோ அல்லது அவர்களின் அரசியல் பணிகளில் ஈடுபடுவதோ தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

4. ஏற்கனவே நடைபெறும் பணிகள்:

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தொடங்கப்பட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறலாம். ஆனால், அதில் அரசியல் தலையீடோ அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவான பிரச்சாரமோ இருக்கக் கூடாது. பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கத் தடையில்லை.

5. விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரம்:

தனிநபரின் அனுமதி இன்றி அவரது சுவர், கட்டிடம் அல்லது நிலத்தை அரசியல் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. இயற்கை பேரிடர் மற்றும் முதியோர் உதவித் தொகை போன்ற அத்தியாவசிய நிதிகளை வழங்கத் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி கட்டாயம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory