» சினிமா » செய்திகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய ரஜினிகாந்த்
வெள்ளி 22, டிசம்பர் 2023 3:30:43 PM (IST)
நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை வீடு வீடாக வழங்குவற்கு ரஜினிகாந்த் அனுப்பி வைத்துள்ளார்.
கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானார்கள். ஆயிரம் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. பொதுமக்களின் உடைமைகளை வெள்ளம் அடித்து சென்றது. உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. நடிகர் ரஜினிகாந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். நேற்று 4 மாவட்டங்களிலும் ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் போர்வை, பாய், உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீடு வீடாக வழங்குவற்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து வாகனங்களில் இந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வீடு வீடாக வினியோகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.