» சினிமா » செய்திகள்

மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நிறுத்திவைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு !

செவ்வாய் 12, செப்டம்பர் 2023 3:28:59 PM (IST)

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

நடிகா் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. 

கடனை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், ‘15 கோடி ரூபாயை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயரில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்‘ என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.  

இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தனர். மேலும், ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யும்  வரை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களை  வெளியிடக்கூடாது என தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாகவும், விஷாலின் மார்க் ஆண்டனி படம் வரும் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், செப்.12 ஆம் தேதி விஷால் நேரில் ஆஜாராக வேண்டும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், நடிகர் விஷால் ஆஜரானதை தொடர்ந்து, மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மேலும், நடிகர் விஷால் அடுத்தமுறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிபதி ஆஷா நிறுத்தி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory