» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி : பயிற்சியாளர் விளக்கம்!
செவ்வாய் 5, மார்ச் 2024 11:27:11 AM (IST)
ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி ரஞ்சி கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் மும்பையிடம் இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் தமிழக அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது.
இந்த நிலையில், ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே நாங்கள் தோற்றுவிட்டோம் என தமிழக அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அரையிறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தை பார்த்த தருணத்திலேயே இந்த ஆடுகளத்தில் எங்களால் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியும் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. காலிறுதிப் போட்டியில் நாங்கள் விளையாடிய ஆடுகளத்தின் தன்மையும் அரையிறுதிப் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மையும் வெவ்வேறானவை. வேகப் பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் உள்ள ஆடுகளத்தைப் பார்த்த உடனே இந்தப் போட்டி மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன்.
நான் எப்போதும் மனதில் தோன்றுவதை நேரடியாக பேசக் கூடியவன். நாங்கள் போட்டி தொடங்கிய முதல் நாள் 9 மணிக்கே தோற்றுவிட்டோம். நாங்கள் முதலில் பந்து வீசியிருக்க வேண்டும். டாஸ் வென்ற போதிலும் நாங்கள் பேட்டிங்கைத் தேர்வு செய்தோம். என்னுடைய கருத்துகளை கூற முடியும். ஆனால், கேப்டன் எடுக்கும் முடிவே இறுதியானது என்றார்.