» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது இந்தியா: தொடரை கைப்பற்றியது!.

திங்கள் 26, பிப்ரவரி 2024 3:01:18 PM (IST)



ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி  இந்தியா, 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷிர் 5 விக்கெட்களையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியை அளித்தார்.

அந்த அணியில் ஜாக் கிராவ்லி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவர் 60 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 4, டாம் ஹார்ட்லி 7, ஆலி ராபின்சன் 0 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சில் வீழ்ந்தனர். கடைசியாக பென் போக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் கைப்பற்றினார்.

இதனால் 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமானார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. 

ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் இன்று நான்காவது நாளை தொடர்ந்தனர். மேலும் பொறுப்பாக விளையாடியது இக்கூட்டணி. 37 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் அடித்த பந்தை அசாத்தியமாக கேட்சாக பிடித்து ஆண்டர்சன் அவரை ஆட்டமிழக்க வைத்தார். ரூட் பந்தில் முதல் விக்கெட்டானர் ஜெய்ஸ்வால். மறுபக்கம் ரோஹித் சர்மா நிதானத்துடன் விளையாடி அரைசதம் கடந்தார். எனினும் அவர் ரோஹித் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

ரோஹித் 55 ரன்களில் அவுட் ஆக, ரஜத் படிதார் 0, ஜடேஜா 4 ரன்கள், சர்ஃப்ராஸ் கான் 0 என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்களை இழந்தது. எனினும், ஒன் டவுன் இறங்கிய ஷுப்மன் கில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் உடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு நோக்கி அழைத்து சென்றார். இருவரும் பொறுப்பாக விளையாடி பவுண்டரிகளை விரட்டி வெற்றியைத் தேடித்தந்தனர். 61 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

ஷுப்மன் கில் 52 ரன்கள், துருவ் ஜூரெல் 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஷோயிப் பஷிர் 3 விக்கெட் வீழ்த்தினார். நடப்பு டெஸ்ட் தொடரில் இந்தியா பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory