» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக மக்களுக்கு தவெக அரசு செய்யும் துரோகம் : நயினார் நாகேந்திரன் சாடல்!

சனி 27, ஜூன் 2026 8:07:35 AM (IST)

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகக் கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகக் கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா என்பவரைத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாகியான இவர், கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே ஏற்கனவே மேகதாது அணை விவகாரம் மற்றும் தென்பெண்ணை ஆறு நீர்ப் பகிர்வுப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இத்தகையச் சூழ்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைத் தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும்? இந்த நியமனம் தமிழக மக்களுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் ஆகும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. தவெக நிர்வாகிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்பதாகக் தகவல்கள் வருகின்றன. ஆனால், காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாதவாறு கைகள் கட்டப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. கடந்த காலங்களைப் போலவே தற்போதும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்து, தமிழகம் மோசமான சூழ்நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் முதல்வர் நடந்துகொண்ட விதம் மற்றும் அவரது பேச்சுக்கள் ஒரு முதலமைச்சருக்குரிய தன்மையில் இல்லை; அது கண்டிக்கத்தக்கது. இன்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும் ஒன்றிணைந்து பிராந்தியப் பிரச்சனைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் இதில் கலந்துகொள்ளாமல் சட்டமன்றத்தில் அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். தமிழக முதல்வருக்கு மாநில மக்களின் நலன் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

மாநிலத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வெறும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டங்கள் மட்டும் போதாது. காவல்துறைக்கு முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும். திரைப்பட பாணியிலோ அல்லது ஸ்டூடியோக்களைப் போன்றோ அரசு நிர்வாகத்தையும் சட்டமன்றத்தையும் நடத்தக் கூடாது; இதற்கு மக்கள் வரும் காலத்தில் தகுந்த தீர்ப்பு வழங்குவார்கள் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory