» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதி விபத்து : கொரியர் ஊழியர் பரிதாப பலி
புதன் 10, ஜூன் 2026 8:45:37 AM (IST)
எட்டயபுரம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் பஸ் மோதியதில், பலத்த காயமடைந்த தனியார் கொரியர் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மாசார்பட்டி அருகே உள்ள வேடபட்டி அச்சன்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கோபி (30), தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 4-ஆம் தேதி தனது பகுதியைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட நண்பர்களுடன் ஆன்மீகப் பயணமாகத் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டுள்ளார்.
பக்தர்கள் குழுவினர் மதுரை - தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் எட்டயபுரத்தைக் கடந்து கீழஈரால் மின்வாரிய பவர்கிரிட் பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத பஸ் ஒன்று, எதிர்பாராதவிதமாகப் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்தது.
இந்த கொடூர விபத்தில் பஸ் மோதியதில் கோபி மற்றும் வினோத் ஆகிய இருவரும் உடல் நசுங்கிப் பலத்த காயமடைந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய பஸ், அங்கேயே நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டது. உடன் சென்ற சக பக்தர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த கோபி மற்றும் வினோத் ஆகிய இருவரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவ வளாகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு கோபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த கோபி, சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இக்கோர விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பக்தர்கள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற பஸ்சையும், அதன் ஓட்டுநரையும் உடனடியாகக் கண்டுபிடித்துக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அச்சன்குளம் கிராம மக்கள் நேற்று காலையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகம் அருகே திடீரெனத் திரண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், சாலைமறியலுக்கு முயன்ற கிராம மக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய பஸ்சையும் அதன் ஓட்டுநரையும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மிக விரைவில் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், தங்களது மறியல் போராட்ட முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார் - முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 10:08:42 AM (IST)

ஜமாபந்தியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 10, ஜூன் 2026 8:34:53 AM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.48.75 லட்சம் சுருட்டிய கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 8:18:44 AM (IST)


