» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்து: 20 பேர் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:56:24 PM (IST)

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி ஒரு கைக்குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பகுதியில் 'வனஜா' என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதிலும், தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மருந்துகள் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாகத் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் ஆலை தரைமட்டமானதுடன், பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சாத்தூர், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் இரங்கல்:

இந்தத் துயரச் செய்தி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர், மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஒருங்கிணைக்க அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். விதிமீறி விடுமுறை நாளில் ஆலை செயல்பட்டது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory