» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:51:55 PM (IST)



விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரம்மாண்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகார்களுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் பதிலடி கொடுத்தார். பிரச்சாரத்தில் பேசிய முதல்வர், "எனது ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில், அவருக்காக வாக்கு சேகரிக்கும் வேட்பாளராக நான் நடித்திருக்கிறேன். அன்று திரையில் அவருக்காகப் பாடி வாக்கு கேட்டேன்; இன்று நேரில் அவரது மகனுக்காக ஒரு முதல்வராக வாக்கு கேட்க வந்திருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய முதல்வர் ஸ்டாலின், "காமராஜர் மற்றும் ஜானகி எம்ஜிஆர் ஆகியோருக்கு திமுக உரிய மரியாதை அளிக்கவில்லை எனப் பழனிசாமி பச்சைப் பொய் கூறுகிறார். காமராஜர் மறைவின் போது மகனாக இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்தவர் கலைஞர். ஜானகி அம்மையார் மறைந்த சில நாட்களிலேயே அவரது திருவுருவப் படத்தை ராமாவரம் தோட்டத்தில் திறந்து வைத்தவரும் கலைஞர்தான். இதெல்லாம் தெரியாமல் வாட்ஸ்ஆப் வதந்திகளைப் பழனிசாமி வாந்தி எடுக்கிறார்."

அரசு ஊழியர்களைத் திமுக ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார். நாங்கள் ஏமாற்றியிருந்தால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எனக்கு இனிப்பு ஊட்டியிருப்பார்களா? அவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய பழனிசாமிக்கு அரசு ஊழியர்களிடம் ஸ்வீட்டும் கிடைக்காது, ஓட்டும் கிடைக்காது. எடப்பாடி பழனிசாமியை 'துரோகத்தின் உருவம்' எனச் சாடிய முதல்வர், அவர் செய்ததாகக் கூறப்படும் துரோகங்களை வரிசைப்படுத்தினார்:

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிப் பெண்களுக்குத் துரோகம். சிஏஏ மற்றும் வக்ஃபு திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவு அளித்துச் சிறுபான்மையினருக்குத் துரோகம். தன்னை வளர்த்துவிட்ட செங்கோட்டையன், பதவிகொடுத்த சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்குத் துரோகம்.

மாநில உரிமைகளுக்காகப் போராடிய ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு மாறாக, பாஜகவுடன் கூட்டணி வைத்து அவருக்கும் துரோகம் இழைத்துவிட்டார்.தமிழகத்தின் வரிப்பணம் முழுவதையும் பெற்றுக்கொண்டு, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசு வாரி வழங்குகிறது என்றும், இத்தகைய செயற்கையான நிதி நெருக்கடியிலும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களைத் திமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory