» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவில்பட்டி வருகை!

திங்கள் 27, அக்டோபர் 2025 5:48:35 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. மேற்கு நகர அலுவலக புதிய கட்டிடம் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க. புதிய அலுவலகம் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல முழுஉருவச் சிலையும் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் கலைஞர் அறிவகம் என்ற பெயரில் நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகிறார். பின்னர் கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் அமைந்துள்ள கோவில்பட்டி மேற்கு நகர தி.மு.க அலுவலகத்தையும், அங்கு நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு திருவுருவச் சிலையையும் திறந்து வைக்கிறார். இதையடுத்து அவர் நூலகத்தை பார்வையிடுகிறார்.

இதனால் உற்சாகமடைந்துள்ள தி.மு.க. தொண்டர்கள் கோவில்பட்டி பகுதியில் முதல்-அமைச்சரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் இருந்து சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடிகளும், நுழைவு வாயில்களும் டிஜிட்டல் பேனர்களும், மின்விளக்குடன் கூடிய நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

கோவில்பட்டியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி கோவில்பட்டி, தென்காசி நகர பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory