» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான்குனேரி மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்
திங்கள் 6, மே 2024 5:28:01 PM (IST)
நான்குனேரி மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், நான்குனேரியில் கடந்த ஆண்டு காழ்ப்புணா்ச்சி காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவர் சின்னத்துரையும் அவரது சகோதரி சந்திரசெல்வியும் சக மாணவா்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை தற்போது அதிலிருந்து மீண்டு வந்து +2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் வாங்கியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:நான்குனேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன். "கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க” என்று தெரிவித்துள்ளார்.