» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
திங்கள் 6, மே 2024 12:23:29 PM (IST)
12ம் வகுப்பு பொதுத்தேர்வில், இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!
இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!. என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன. மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்" என்று தெரிவித்துள்ளார்.