» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது: அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சனி 4, மே 2024 12:39:34 PM (IST)
யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கர் கைது குறித்து போலீஸார், "தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்குள்ளானது. இதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ள நிலையில், விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.