» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகைக்கடையில் ரூ.1.5 கோடி நகைக் கொள்ளை : ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது!
திங்கள் 29, ஏப்ரல் 2024 3:18:15 PM (IST)
ஆவடியில் நகைக்கடையில் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். கடந்த 15-ம் தேதி இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டிப் போட்டு விட்டு கடையில் இருந்த 1.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகை,5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், முத்தாப்புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 8 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, பெங்களூரு , ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில் கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், சேட்டன்ராம் என்பதும், சென்னையில் சென்னையில் தங்கியிருந்த இவர்கள் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரிடம் தப்பிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.