» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி எம்.பி. காரில் மீண்டும் சோதனை
புதன் 3, ஏப்ரல் 2024 8:38:08 AM (IST)
நெல்லை அருகே கனிமொழி எம்.பி.யின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று வந்த அவருடைய காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். இந்தநிலையில் கனிமொழி எம்.பி. நேற்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, நெல்லை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
நேற்று மதியம் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு கனிமொழி எம்.பி. தாழையூத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடைய கார் தாழையூத்து அருகே சென்றபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் கனிமொழி எம்.பி.யின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என சோதனை நடத்தினார்கள். அப்போது காரின் முன்னிருக்கையில் கனிமொழி எம்.பி. அமர்ந்திருந்தார். உள்ளே அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோரும் இருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காரில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கனிமொழி எம்.பி. காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.