» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கிறிஸ்துவ, இஸ்லாமிய சபை நிர்வாகிகள்!
புதன் 27, மார்ச் 2024 7:58:46 AM (IST)
தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள தூத்துக்குடி சென்றுள்ளார்.
இதற்கிடையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிசாமி ஆயர், பேராயர் பர்னபாஸ், டாக்டர் மரியதாஸ், பொன்ராஜ், ஹாஜி இ.ஆர்.செய்யது அகமது, எம்.கே.எம் செய்யது அகமது கபீர், எம்.கே.எம் அகமது ஷாபி, நவாஸ்கான், எப்.காதர் முகைதீன், ஷேக் அப்துல்லா, மீனாட்சி சுந்தரம், செல்லையா ஆகியோரும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பால பிரஜாதிபதி, நசரேன் சூசை ஆகியோர் சந்தித்தார்கள்.
மேலும், செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், கன்னியாகுமாி மாவட்ட பால பிரஜாதிபதி அடிகளார், தூத்துக்குடி பாகம்பிாியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் கல்யாணசுந்தரம் என்ற செல்வம்பட்டர், வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மாியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு தொிவித்தனர்.
மேலும், தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை திருமண்டல பேராயர் மற்றும் செங்கோல் ஆதினம், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், ஐக்கிய வியாபாரிகள் சங்கம், மீனவர் நல சங்கம், தூத்துக்குடி சி.எஸ்.ஐ. திருச்சபையினர் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இந்த நிகழ்வின்போது, தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.