» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கை எடுப்பேன்: ஆளுநர் தமிழிசை உறுதி!!
புதன் 6, மார்ச் 2024 4:15:21 PM (IST)
சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஒன்பது வயது சிறுமியின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ், விவேகானந்தன் ஆகியோர்தான் என போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்ய முயற்சித்ததில் அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்தது என கூறப்படுகின்றது. பின்னர் அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வைத்து வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
சிறுமியை கொலை செய்த இருவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், பிரேத மருத்துவ அறிக்கை வந்த பிறகே போக்சோவில் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் என்பது தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை விவகாரத்தில் நீதி வழங்க கோரி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி சவரிராயலு நாயகர் அரசு பள்ளி மாணவிகள் சிறுமிக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களின் போராட்டத்தில் நியாயம் இல்லை என நான் கூற மாட்டேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வோடுதான் நானும் இருக்கிறேன்.
சிறுமி கொலையால் நிலை குலைந்து விட்டேன். எனது மனம் அடைந்த வேதனையை சொல்ல முடியாது. சிறுமி கொலையில் மிகத் தீவிரமான நடவடிக்கையை நான் எடுப்பேன். சிறுமி கொலை வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த புதுச்சேரி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்