» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: முதல் முறையாக ஜாமீன்!
புதன் 6, மார்ச் 2024 4:06:12 PM (IST)
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முதன் முறையாக காவலர் ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்தார். சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.