» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)
திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயிலைக் கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தென்னக ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் விடுத்துள்ள கோரிக்கை மனுவின் விபரம் பின்வருமாறு: கன்னியாகுமரி சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக மற்றும் கடற்கரைச் சுற்றுலாத் தலமாகும். இங்குக் கடலில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பிறகு கோவா, மங்களூர் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடக அரசும் தனது மாநிலக் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி வரை நிதி உதவியுடன் கூடிய ஆன்மீகச் சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தவிர, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி மற்றும் புனித யாத்திரைக்காகக் கேரளாவுக்குப் பயணிக்கின்றனர். குறிப்பாக, கோழிக்கோடு, மலப்புறம் போன்ற வட கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் இஸ்லாமிய சமூகத்தினரும், வார இறுதி நாட்களில் வீடு திரும்பும் கேரள மாநிலப் பொறியியல் கல்லூரி மாணவர்களும் நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புகழ்பெற்ற புனித தலங்களுக்குச் செல்லும் மாவட்டப் பக்தர்களுக்கு நேரடி இரவு நேர ரயில் இல்லை. இதனால் அவர்கள் திருவனந்தபுரம் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து ரயில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் காலமும் பணமும் வீணாகிறது.
ஏரநாடு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால் பாதிப்பு
முன்னதாக நாகர்கோவிலிருந்து மங்களூருக்குப் பகல் நேரப் பயணமாக 'ஏரநாடு எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ரயில் நள்ளிரவில் நாகர்கோவில் வந்து, நள்ளிரவிலேயே இங்கிருந்து புறப்பட்டதால் மாவட்டப் பயணிகளுக்குப் பெரிய அளவில் பயன்படவில்லை. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
இதைக் காரணம்காட்டி ரயில்வே துறை ஏரநாடு ரயிலைத் திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டது. அவ்வாறு நிறுத்துவதற்குப் பதிலாக, அதன் கால அட்டவணையை மாற்றம் செய்திருக்கலாம் அல்லது திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களில் ஒன்றையாவது நாகர்கோவில் வரை நீட்டித்திருக்கலாம். ஆனால், ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குச் சாதகமான மாற்று ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.
பரிந்துரைகளும் தீர்வுகளும்
திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348): இந்த ரயிலைக் கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பதே இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வாகும்.
பராமரிப்பு வசதி: இந்த ரயிலின் காலி பெட்டிகள் காலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் எவ்விதப் பயன்பாடும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலேயே இதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
கேரள பயணிகளுக்குப் பாதிப்பில்லை: திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்குத் தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 16347/16348 ரயிலை நீட்டிப்பதால் கேரளப் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், தற்போது இந்த ரயில்களில் பயணிப்பவர்களில் கணிசமானோர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.
35 ஆண்டுகால நீண்ட காலக் கோரிக்கை
கடந்த 1989-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் விவாதத்தின் போதே, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ், கன்னியாகுமரியிலிருந்து மங்களூருக்குத் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், 35 ஆண்டுகள் கடந்தும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
முன்னர், 16347/16348 எண் கொண்ட ரயில் கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திட்டமிட்டு அதனைத் திருவனந்தபுரத்திற்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பயணிகள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


