» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!

வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

பள்ளி விரிவாக்கத்திற்காக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பள்ளித் தாளாளரிடம் ரூ.10.5 கோடி மோசடி செய்த தந்தை மற்றும் மகன் மீது நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் மொஹா பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மொஹாவிலும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலும் சர்வதேசப் பள்ளிகளை நடத்தி வருகிறார். தனது பள்ளியை விரிவுபடுத்துவதற்காகத் தமிழகத்தில் நிலம் வாங்க முயன்றபோது, குடும்ப நண்பர் மூலம் நாகர்கோவில் வட்டக்கரையைச் சேர்ந்த ஜோசப் மரியஜெபஸ்டின் அறிமுகமாகியுள்ளார்.

ஜோசப் மரியஜெபஸ்டின் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகியோர், செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பிய சார்லஸ் ஜெபக்குமார், பல தவணைகளாக மொத்தம் ரூ.10.5 கோடி பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜோசப் மரியஜெபஸ்டின், நிலத்தைச் சார்லஸ் பெயரில் கிரயம் செய்து கொடுக்காமல், தனது சொந்தப் பெயரிலேயே கிரயம் செய்து கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சார்லஸ் ஜெபக்குமார், இது குறித்துப் பஞ்சாப் மாநிலம் மொஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், சம்பவம் நடந்தது குமரி மாவட்டம் என்பதால் அந்தப் புகார் குமரி மாவட்டக் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பஞ்சாப் போலீசார் அனுப்பிய முதல் தகவல் அறிக்கை (FIR) பஞ்சாபி மொழியில் இருந்ததால், குமரி மாவட்ட போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதன்பின்னர், அந்த ஆவணங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஜோசப் மரியஜெபஸ்டின் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவர் மீதும் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory