» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கஞ்சா வியாபாரிகளுக்கு காவல்துறை ஒத்துழைப்பு: வி.சி.க. குற்றச்சாட்டு!
வெள்ளி 8, மார்ச் 2024 10:39:38 AM (IST)
குமரி மாவட்டத்தில் கஞ்சாவை ஒழிக்க காவல்துறை களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர்அல் காலித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "குமரி மாவட்டத்தில் எந்தப் பகுதியில் சென்றாலும் கஞ்சா நம்மை வரவேற்கிறது இடலாக்குடி சுற்றுவட்டார பகுதியில் முட்புதர் கிடக்கும் நிலத்தில் வைத்து கஞ்சா வியாபாரம் நடக்கிறது... மாலை வேளையில் அரசமூடு பூக்கடை பகுதியில் இருந்து சந்து வழியாக பேருந்து நிலையம் வரும் வழியில் சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்து கஞ்சாவை ரசித்து குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வடசேரி பாலமோர் சாலை சென்றால் எல்லா பகுதியிலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதல் பல பேர் புத்தேரி பாலம் கீழ் கஞ்சாவுக்கு அடிமை ஆகி கொண்டே இருக்கிறார்கள்.
அரல்வாய்மொழி செண்பகராமன் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் களை கட்டுகிறது சிறப்பாக பார்க்க வேண்டுமானால் எங்கெல்லாம் கல்லூரிகள் இருக்கிறதோ எங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் இருக்கிறதோ அந்தப் பகுதியில் தான் அதிகமாக கஞ்சா வியாபாரம் நடக்கிறது அதுவும் தொலைபேசி வழியில் தான் கஞ்சா தொடர்பு கொண்டு சப்ளை செய்யப்படுகிறது இப்படியே சென்றால் வருங்கால தலைமுறை சீர் கெட்டு சீரழிந்து போய்விடும் இந்த மாவட்டத்தில் இவ்வளவு கஞ்சா புழக்கத்தில் இருப்பது காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் தெரியாமல் நடக்கவே முடியாது காவல்துறையும் உளவுத்துறையும் கஞ்சா வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ என்கிற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
காவல்துறை மனது வைத்தால் 24 மணி நேரத்தில் ரவுடிகளையும் ஒழிக்க முடியும் கஞ்சாவையும் ஒழிக்க முடியும் ஏன் இந்த மௌனம் என்று மக்கள் கேக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் பாண்டிச்சேரியில் நடந்தது நாளை இங்கே நடக்காது என்று நம்மால் கூற முடியாது. கஞ்சா வியாபாரிகளுக்கு பின்னால் அரசியலும் இருப்பதாக தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் மக்களை காப்பது காவல்துறையின் கட்டாய கடமை.. ஆக உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை களத்தில் இறங்கி ரவுடிகளை ஒழிப்பது போல் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது இல்லையென்றால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்க நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.