» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மஹா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!
வியாழன் 29, பிப்ரவரி 2024 8:15:45 PM (IST)
மஹா சிவராத்திரியினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 08ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 08.03.2024 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
08.03.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.