» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு : அமைச்சர் பேச்சு
வியாழன் 29, பிப்ரவரி 2024 5:30:15 PM (IST)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி வருகிறது என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானவில் பாலின வள மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்களின் முன்னிலையில் இன்று (29.02.2024) திறந்து வைத்து பேசுகையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள் வரை பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை, அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பிற்கு செல்லும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் நலத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்குதல், மகளிர் சுயஉதவிக்குழுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெண்களின் பாதுகாப்பினை வலுசேர்க்கும் வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் வானவில் வள மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் முக்கிய நோக்கம் உரிமைகள், மருத்துவம், உளவியல், சட்டம், தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பிற ஆலோசனை ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் கிராம, நகர்ப்புற பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஒருங்கிணைந்த ஆதரவு சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதே ஆகும்.
மேலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பவும், சேவை வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறைகளுடன் இணைத்து செயல்படவும், பெண்கள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் சமூகத் தடைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வானவில் வள மையம் வாயிலாக வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி வருகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ், பேசினார்.
அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்கள். மேலும் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பதாகையினை அலுவலகத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பீபீஜான், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் அனுஷியா தேவி, உதவி திட்ட அலுவலர்கள் ஞான வளர்மதி, கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.