» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., மீண்டும் வெற்றி பெறும்: விஜய்வசந்த்

வியாழன் 29, பிப்ரவரி 2024 4:56:16 PM (IST)

விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., மீண்டும் வெற்றி பெறும் என்று விஜய்வசந்த் எம்பி தெரிவித்தார். 

குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர்.

தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். 

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்.

அவருக்கு கேட்ட பதவி வழங்க வேண்டும். இப்போது கேட்ட பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சி மாறி சென்று உள்ளார். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சட்டமன்ற தொகுதி வாரியாக மினி ஸ்டேடியங்களை அமைத்து வருகிறது.

நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார். காங்கிரசில் இருப்பது தான் எங்களுக்கு பெருமை. காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வழங்கியுள்ளோம்.

நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் கிடந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு கனவு திட்டமாகும். புதிய ரெயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory