» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி கடற்கரை பகுதியில் சூழலியல் பூங்கா அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் ஆய்வு!
புதன் 28, பிப்ரவரி 2024 5:39:36 PM (IST)
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சூழலியல் பூங்கா அமைப்பதற்கான இடத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் புதிய பூங்கா மற்றும் தோட்டம் அமைப்பதற்கான இடத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் இன்று (28.02.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ஆணை பிறப்பித்தார்கள்.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் சார்பில் கன்னியாகுமரி கோவளம் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் தெற்கில் உள்ள நில அளவை செய்யப்படாத கடற்கரை புறம்போக்கு நிலத்தில் பூங்கா மற்றும் தோட்டம் அமைக்க தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அவர்களிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டள்ளது.
இந்த அறிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் புதிய சூழலியல் பூங்கா மற்றும் தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆய்வில் தோட்டக்கலை துறை இணை இயக்குநர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், பாபு, வழக்கறிஞர் தாமரை பாரதி, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.