» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் கடல்சார் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு
புதன் 28, பிப்ரவரி 2024 4:14:29 PM (IST)
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில் "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவர் அவர்களின் புகழினை பறைசாற்றும் வகையில் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் 133 அடியிலான அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலையினை நிறுவினார்கள்.
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு கோடி பேரை ஈர்க்கும் வகையில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் போக்குவரத்துக்கழக படகு சேவை மூலம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கின்றனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கான படகு தளம் ஆழம் அதிகமான பகுதியில் உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலைக்கான படகு தளம் ஆழம் குறைவானதாகவும் அதிகப்படியான பாறைகள் நிறைந்த இடமாகவும் உள்ளதால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் மைக்க நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்புநிதியாக ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை மற்றம் விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கண்ணாடி கூண்டு பாலத்தின் கட்டுமான பணிகள் இரண்டு மாதத்திற்குள் முடிவடைந்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்க கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வுகளில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், பாபு, வழக்கறிஞர் தாமரை பாரதி, சுற்றுலா அலுவலர்கள், பூம்புகார் மேலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.