» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நின்ற லாரி மீது கார் மோதியதில் 2 மருத்துவ மாணவர்கள் பலி: 3 பேர் படுகாயம்
சனி 17, பிப்ரவரி 2024 8:48:34 AM (IST)
சேலம் அருகே நின்ற லாரி மீது கார் மோதியதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர்.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே பொய்மான் கரடு பெட்ரோல் பங்க் அருகில் சாலையோரம் காற்றாடி என்ஜினை சுமந்தபடி டாரஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. ேநற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் அந்த வழியாக வந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர். இதைக்கேட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் விரைந்து வந்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்ட போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-விபத்தில் பலியானது சேலம் அங்கம்மாள் காலனி குப்தாநகரை சேர்ந்த செல்வராஜ் மகன் கவுதம் (21), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுமணியை சேர்ந்த பிரபாகர்சிங் மகன் கேமியோ என்பதும் தெரியவந்தது.
காயம் அடைந்தவர்கள் சேலம் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணி மகன் சரண் (23), கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு தாலுகா மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் சத்தியபிரவீன் (21), சென்னை அம்பத்தூரை சேர்ந்த மகேஷ்குமார் மகன் ஜெகன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தனர்.
கல்லூரி விடுமுறையை ஒட்டி மாணவர்கள் 5 பேரும் பலியான கேமியோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு வந்தனர். சேலத்தில் கவுதம், சரண் ஆகியோரது வீட்டுக்கு சென்று விட்டு கன்னியாகுமரி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். காரை கேமியோ ஓட்டி சென்றார். கார் மல்லூர் பகுதியில் சென்றபோது கேமியோவின் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.