» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் கைவிரிப்பு பயணிகள் சங்கம் கண்டனம்!

வெள்ளி 2, பிப்ரவரி 2024 12:07:19 PM (IST)

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைியல், "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ள கோசம் ஆகும். மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இந்த கோசம் சரியாக பொருந்தி வருகின்றது. மத்திய அரசு வடமாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்ற காரணத்தால் தென்மாநில மக்கள்  மத்திய அரசுக்கு எதிராக இந்த வாக்கியத்தை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல் தென்மாவட்ட மக்களுகம் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எதிராக இந்த கோசம் சரியாக பொருந்தி வருகிறது என்றால் மிகையாகாது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு புதிய ரயில் இருப்பு பாதை திட்டம் அறிவிக்கப்படவில்லை.   பல்வேறு புதிய திட்டங்களுக்கு என சர்வேக்கு தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 25 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எட்டு புதிய இருப்புபாதை திட்டங்களும், ஒரு இருப்பு பாதை திட்டம் சர்வே மறுமதிப்பீடு அறிவிக்கப்பட்டது. இதில் மறுமதிப்பீடு சர்வே திட்டத்தின் கீழ் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது தென்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மறுமதிப்பீடு சர்வேக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த திட்டத்தின் ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ரேட் ஆப் ரிட்டன் வருவாய் அதிகரித்தால் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த திட்டம் எடுத்து செயல்படுத்த பிரகாசமான வாய்ப்பு வரும். இதற்கு கூட பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து சர்வேக்கள் என்று தெற்கு ரயில்வேக்கு 41 சர்வேக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 9 புதிய இருப்புபாதை சர்வேக்கள் ஆகும். இந்த 9 பாதைகளும் தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் உள்ள திட்டங்கள் ஆகும். மதுரைக்கு தெற்கே தென் மாவட்டங்களில் ஒரு சர்வே கூட அறிவிக்கப்படவில்லை. இந்த காரணத்தால்தான் தமிழ்நாட்டில் உள்ளேயும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் சரியாக பொருந்தி வருகிறது.

 அறிவிக்கப்பட்ட புதிய இருப்புபாதை  சர்வேக்கள்

1. செங்கல்பட்டு – மகாபலிபுரம் -45 கி.மீ
2. குமுழி – சபரிமலை -106 கி.மீ
3. கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை -40 கி.மீ
4. திண்டுக்கல் - சபரிமலை -201 கி.மீ
5. முசிரி – சென்னை – 350 கி.மீ
6. கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை – 69 கி.மீ
7. அரியலூர் - நாமக்கல் -108 கி.மீ
8. ஜோலார்பேட்டை திருப்பத்தூர் - ஓசூர் - 101 கி.மீ
9. ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி – 60 கி.மீ

மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை  தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகள் ஆங்கிலேயர் காலத்திலே அமைக்கப்பட்டது ஆகும்.  திருநெல்வேலி – நாகர்கோவில்  74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை – 15-04-1979 அன்றும் விருதுநகர் - அருப்புகோட்டை மீட்டர்கேஜ் பாதை 01-09-1963 அன்னும் அருப்புகோட்டை – மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 02-05-1964-ம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. 

இந்த திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு பிறகு தென்மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்புபாதைகள் ஆகும். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. பாரதம பிரதமர் மோடி அவர்கள்  2014 தேர்தலுக்கு முன்பாக கடந்த 75 ஆண்டுகளாகவே ஆண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை என்று பலமுறை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. 

இதனால் மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.  இந்த திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறைந்தபட்சம் இந்த திட்டம் ரிசர்வே மறுமதிப்பீட்டுக்கு கூட அறிவிக்கப்படவில்லை.  பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014 அல்லது 2015 –ம் ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் தற்போது இந்த திட்டம் செயல்வடிவம் பெற்று பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும். இது தென்மாவட்டங்களில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கணிசமான அளவில் வாக்குகள் கிடைத்திருக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை:-

கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைகுடி வரை  ரயில் மூலம் இணைக்கபடவேண்டும் என்று தென்தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.  கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழி தடத்தில் உள்ள தூத்துகுடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்கபட்டுவிடும். இதனால் பொருதாளரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது  கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்றுபாதையில்தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில்பாதை அமைக்கப்ட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.

குலசேகரம்பட்டிணம் ரயில்பாதை:-

திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர்காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை துவங்கிய 1914ம் ஆண்டு "பாரி அன் கோ' எனும் நிறுவனம் மூலம் குலசேகரன்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். 

அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்குபட்டது. திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. 

திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது.  இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கிபோனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதங்கான எந்த அறிகுறியும் இன்றி காணப்படுகிறது.

கன்னியாகுமரி – காரைகுடி புதிய ரயில் பாதை:-

கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம்,ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுபணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.

காரைக்குடி – தூத்துக்குடி:

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம்,கீழகரை, ஏர்வாடி,சாயல்குடி,சூரங்குடி, குழத்து வழியாக தூத்துக்குடிக்கு சர்வெ செய்யப்பட்டது.

தூத்துக்குடி - கன்னியாகுமரி:-

கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துகுடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க 1080 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டிணம், மணிநகர், திசையன்விளை,நாவலடி,கூடங்குளம், மகாராஜபுரம்,பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும்.

மொத்த ரயில் நிலையங்கள்:-

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து ; 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

ரேட் ஆப் ரிட்டன்:-

பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். இதற்கு ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். 

இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து,சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்தில் காரைக்குடி – தூத்துக்குடி  மைனஸ் -8.35%  ரேட் ஆப் ரிட்டன்  ஆகவும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதை -8.88%  ரேட் ஆப் ரிட்டன்  ஆகவும் உள்ளது.  இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன்  வரும் திட்டங்களை ஆய்வு செய்துவிட்டு கைவிட்டு விடுவார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்கள் பல உள்ளன். ரேட் ஆப் ரிட்டன்  குறைவாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கிடப்பில் இந்த திட்டம்

ரயில்வே வாரியம் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வு அறிக்கையை பொதுமக்களுக்கு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கின்ற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்கு வேண்டி இந்த கிழக்கு கடற்கரை ரயில்பாதையை சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆய்வு செய்து வருகின்ற ;பட்ஜெட்டில் அறிவித்து சிறப்பு கவனம் செலுத்தி போதிய நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக துவங்கப்பட வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரீசர்வே

இந்த திட்டம் சர்வே செய்யும் 2009 முதல் 2011 வரை இந்த பகுதிகள் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த கிழக்கு கடற்கரை ஓரமாக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கூடங்குளம் அணுமின்நிலையம், குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம், கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், மின்திட்டங்கள் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது மட்டுமில்லாமல் கேரளா தமிழ்நாடு எல்லை அருகே விழிஞம் என்ற இடத்தில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் உள்ள தூத்துக்குடி மற்றும் மேற்கு கடற்ரையில் உள்ள விழிஞம் துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு இந்த திட்டம் மிகவும் பயளுள்ளதாக திட்டமாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த இருப்புபாதை திட்டத்தை மீண்டும் ரிசர்வே செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஏனென்றால் ரிசர்வே செய்தால்தான் தற்போது இந்த திட்டத்தின் நிதி எவ்வளவு ஆகும், வருவாய் எவ்வளவு கிடைக்கும் என முழு விபரங்கள் தெரியவரும். ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கூட தயாராக இல்லை. தென்மாவட்ட  மக்கள் முதலில் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கோரிக்கை வைத்தார்கள். அதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை.

சீனாவின் ஆதிக்கம்:

அருணாசல்பிரதேசம் மாநிலத்தில் சீனாஉடன் எல்லை பங்கிட்டு வருகின்ற காரணத்தால் இந்த மாநிலத்தில் பல்வேறு புதிய இருப்புபாதை திட்டங்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் அருகில் எல்லை பகுதிகளாக கன்னியாகுமரி முதல் காரைக்குடி வரை உள்ள கடற்கரை பகுதிகள் உள்ளன. 

இது மட்டுமில்லாமல் இந்த கடற்கரை பகுதிகளில்தான் அதிக அளிவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் உள்ளன. அதாவது ஆணுமின்நிலையம், ராக்கெட்ஏவுதளம், நாங்குநேரி கடற்படை முகாம் இவ்வாறு அடுக்கிகொண்டே போகலாம். ஆகவே இந்த திட்டம் இந்தியா ராணுவம் சார்ந்து பாதுகாப்பு சார்ந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தைஉடனடியாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory