» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் - ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!
புதன் 31, ஜனவரி 2024 4:50:13 PM (IST)
குமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட, குழித்துறை அரசு மருத்துவமனை, மார்த்தாண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குழித்துறை நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (31.01.2024) காலை முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக விளங்கோடு வட்டத்திற்குட்பட்ட, விளவங்கோடு கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டதோடு, வருவாய்துறை வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசுச் சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் / வருமானச் சான்றிதழ் / இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள். முதியோர் / கைம்பெண் / கணவனால் கைவிடப்பட்டவர் / மாற்றுத்திறனாளி/முதிர்கன்னி மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள் உள்ளிட்ட சேவைகளை உடனடியாக பரிசீலித்து, முறையாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் திருத்துவபுரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க அலுவலகத்தினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு அரசால் சங்கத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் வேளாண் இடுப்பு பொருட்கள் குறித்து கேட்டறிந்ததோடு, திருத்துவபுரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க நியாய விலைக்கடையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைதொடர்ந்து களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் களியக்காவிளை பேரூராட்சி வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து செயல் அலுவலர் அவர்களிடம் கேட்டறிந்ததோடு,. மேலும் களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், வன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட மேக்கோடு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறிந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேக்கோடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதி, மின்சார வசதி, விளையாட்டு மைதானம் குறித்து கேட்டறிந்ததோடு, மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திகுட்பட்ட, மலையடி ஊராட்சி மன்ற அலுவலகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுகளில் விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.