» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மருத்துவமனை விடுதியில் நெல்லை நர்சிங் மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை!
புதன் 31, ஜனவரி 2024 8:15:55 AM (IST)
நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை குளியல் அறையில் நெல்லையை சேர்ந்த நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே மேலச்செவல் பக்கமுள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சேர்மன்துரை (42). டிரைவர். இவருடைய மகள் கீதா (19). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 முடித்தார். அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். தற்போது 2-ம் ஆண்டு படித்து வரும் அவர் மருத்துவமனையின் தேரகோல்புதூரில் உள்ள செவிலியர் மற்றும் பயிற்சி செவிலியர் தங்கும் விடுதியில் தங்கி படித்தார்.
நேற்று முன்தினம் மருத்துவமனையில் பயிற்சி முடிந்ததும் இரவு அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார். பின்னர் அவர் தனது செல்போன் மூலம் தந்தையிடம் பேசியதாக கூறப்படுகிறது. இரவு வழக்கம்போல் தூங்க சென்ற அவர் நேற்று காலையில் விடுதியில் உள்ள குளியலறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே அவர்கள் மூலம் வடசேரி போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிறகு தூக்கில் பிணமாக தொங்கிய கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கீதாவின் தந்தை சேர்மன்துரை புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கீதா அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். ஆனால் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி தற்கொலை செய்த சோகத்தை ஏற்படுத்தியது.