» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் சிறப்பு சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.13 கோடி கடன் உதவி
செவ்வாய் 30, ஜனவரி 2024 5:47:15 PM (IST)
குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் 268 நபர்களுக்கு ரூ.1.13 கோடிக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (30.01.2024) கடனுதவிகள் வழங்கி தெரிவிக்கையில் "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்திற்கு உதவிக்கரம் வழங்க வேண்டியதன் அவசியத்தினையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகப் பொருளாதார அமைப்பில் சிறு வணிகங்கள் வகிக்கும் முக்கிய பங்கினை உணர்ந்து சிறு வணிகர்கள் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வணிகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகக் கடன் திட்டம் முகாம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் மற்றும் பீப்பிள்ஸ் நகர கூட்டுறவு வங்கியிலும் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தின்படி சிறுவணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் ரூ.1,00,000/- வரை கடன் தொகையை பெறலாம். ரூ.10,000/- வரை 4% வட்டி வீதத்திலும், ரூ.10,001/- முதல் ரூ.1,00,000/- வரை 6% வட்டி வீதத்திலும் சிறு வணிகக் கடன் வழங்கப்படுகிறது. 29.01.2024 வரையில் 268 நபர்களுக்கு ரூ.1.13 கோடிக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18 நபர்களுக்கு ரூ.6.85 இலட்சத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. எனவே இம்முகாம்கள் மூலமாக அனைத்து சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர் மற்றும் தெருவோர வியாபாரிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.