» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உதயகிரி கோட்டையில் அரியவகை வண்ண பறவைகள் பூங்கா பணிகள் துவக்கம்!
வியாழன் 25, ஜனவரி 2024 5:56:19 PM (IST)
உதயகிரி கோட்டையில் ரூ.3.24 கோடி மதிப்பில் அரியவகை வண்ண பறவைகள் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட உதயகிரிகோட்டை வளாகத்தில் அரியவகை வண்ண பறவைகள் தங்குவதற்கான புதிய பூங்கா அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (26.01.2024) துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து தரப்பட்ட பொதுமக்களின் அடிப்படை வளர்ச்சிதிட்டப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பணிகள் உள்ளிட்ட பொதுமக்களை கவரும் வகையில் கன்னியாகுமரி, திற்பரப்பு, பேச்சிப்பாறை, கோதையாறு, சிற்றாறு, மாத்தூர் தொட்டி பாலம், லெமூர் கடற்கரை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
மேலும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உதயகிரிகோட்டையினை சுற்றுலா பயணிகள் அதிகமாக பார்வையிடும் வகையில் உதயகிரிகோட்டை வளாகத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளதோடு, பல ஆண்டுகளாக பாரமாரிப்பு அற்று இருந்த குளமானது தற்போது தூர்வாரப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் தற்போது ஒரு சில பறவைகள் மற்றும் விலங்குகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றினை இன்றைய தினம் மூலதன மானிய நிதி 2022- 2023 திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பில் 25,000 சதுர அடியில் அரிய வகை பறவைகள் தங்குவதற்கான பூங்கா அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டு வரும் பொழுது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறவைகளை தவிர்த்து இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள அரிய வகை பறவைகள் இயற்கையான சூழலில் தங்குவதற்கு வழிவகை செய்யுமாறு அமையும். இவ்வாறு அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியல் பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன், நகராட்சி ஆணையர் லெனின், நகர்மன்ற உறுப்பினர்கள் சுகந்தி, சுரேகா பேகம், கிருஷ்ண பிரசாத், சேக் முகமது உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.