» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேசிய பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சிகள்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்
வியாழன் 25, ஜனவரி 2024 5:16:32 PM (IST)
தேசிய பெண்குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்கள்
கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் விழிப்புணர்வ நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
தேசிய பெண் குழந்தைகள் தினமானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆக்கப்பூர்வமாக நடத்திடும் வகையில் கடந்த 19.01.2024 முதல் இன்று (25.01.2024) வரை வெகு விமர்சையாக சமூகநலத்துறை, பள்ளி கல்லூரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேலைவாய்ப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.
நிகழ்வுகளில் ஒன்றாக பெற்றோர்களின் மகனும் மகளும் சமம் என கருதி வளர்பேன், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பேன், பாலினம் அறிய முயலும் சம்பவம் தெரியவந்தால் புகார் அளிப்பேன். மகளிர் மற்றும் பெண்களுக்கு பாதுகப்பான வன்முறையற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவேன்.எளிமையான திருமணங்களை ஆதரிப்பேன். பெண்கள் பரம்பரை சொத்துரிமை பெறுவதற்கு ஆதரவளிப்பேன். குழந்தைகளுக்கான சட்டங்கள், அடிப்படை உரிமைகள் குறித்து அவர்களுக்கு கற்பிப்பேன் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பேன் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் பள்ளிக் கல்லூரிகளில் போட்டிகள்,விழிப்புணர்வு கூட்டங்கள், பேரணிகள் மற்றும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து அரசுப்பள்ளிகளில் பயிலும் நலிவுற்ற மாணவியர்களால் அறிவியல் கண்காட்சி மற்றும் வகுப்புவாரியாக சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும், தொடர்ந்து உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நுழைவுத்தேர்வு குறித்த விழிப்புணர்வு வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் வல்லுனர்களால் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் முதல் களியாக்கவிளை வரையிலான போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி விழிப்புணர்வு நடைபயணத்தினை கொடியசைத்து துவக்கி வைத்ததோடு, பெண்குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்கள்.
நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சங்கர நாரயணன் உட்பட துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள்,மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.