» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கிளினிக்கில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை: பா.ஜனதா பிரமுகர் கைது
சனி 13, ஜனவரி 2024 8:02:34 AM (IST)
நாகர்கோவிலில் கிளினிக்கில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பகுதியில் 36 வயதுடைய பெண் டாக்டர் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த கிளினிக்கில் சம்பவத்தன்று தக்கலையை அடுத்த குமாரபுரம் முட்டைக்காடு பாரதியார் சாலையை சேர்ந்த நாஞ்சில் ஜெயக்குமார் (50) என்பவர் பல் சிகிச்சைக்காக வந்தார். இவர் தற்போது நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தங்கியிருந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் பா.ஜனதா கட்சி பிரமுகராக இருந்து வருகிறார்.
நாஞ்சில் ஜெயக்குமார், பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றபோது, அவர் தன்னை அரசியல் கட்சி பிரமுகர் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து பெண் டாக்டர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது அவர் பாலியல் தொல்லை தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே பெண் டாக்டர் இதை கண்டித்ததோடு, போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே நாஞ்சில் ஜெயக்குமார் ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டிச் சென்றார். பின்னர் பெண் டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் டாக்டர் கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி செய்தது தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும், இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.