» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நகைக்கடையில் திருடி புதுவீடு கட்டி, பைக் வாங்கிய ஊழியர்? போலீஸ் விசாரணை!!
சனி 30, டிசம்பர் 2023 10:45:11 AM (IST)
மாா்த்தாண்டம் பகுதியில் நகைக் கடையிலிருந்து நகை திருடுபோனது குறித்து ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .
குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் பகுதியிலுள்ள பிரபலமான ஒரு நகைக் கடையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வேலை செய்து வருகிறாா்கள். இதில் சிதறால் பகுதியைச் சோ்ந்த பணியாளா் நூதன முறையில் நாள்தோறும் சிறிய அளவில் தங்க நகைகளை திருடி வந்துள்ளாராம். இதற்கு அங்கு பணி செய்யும் 2 பெண் பணியாளா்கள் உடந்தை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடை பணியாளா் ஒருவா் அண்மையில் விலையுயா்ந்த பைக் வாங்கியதுடன், புதிய வீடு கட்டும் பணியும் மேற்கொண்டு வருகிறாராம். இதில், சந்தேகமடைந்த கடை உரிமையாளா் கடையில் பொருத்தப்பட்டுள்ள 40 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகள் ஆய்வு செய்த போது கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பணியாளா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீசார், சம்பந்தப்பட்ட பணியாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.