» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ் ஆட்சிமொழி சட்டம் விழிப்புணர்வு பேரணி: டிஆர்ஓ துவக்கி வைத்தார்
புதன் 27, டிசம்பர் 2023 3:44:12 PM (IST)
நாகர்கோவிலில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று (27.12.2023) நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழி சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியிணை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார்கள்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வாரகாலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18-12-2023 தொடங்கி ஒருவார காலம் நடைபெற்று வருகிறது. ஆட்சிமொழி சட்டவாரம் ஆறாம் நாளான இன்று (27-12-2023) ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கடைவீதி வழியாக நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நிறைவடைந்தது.
விழிப்புணர்வு பேரணியில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி , ஸ்காட் கல்லூரி மாணவ/ மாணவிகள் மொத்தம் 250 பேர் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். வல்லன்குமாரவிளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொட்டுமேளம் இசை முழங்கினர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குறளகம் தமிழ்க்குழவி விஸ்வநாதன், கவிமணி நற்பணி மன்றம் மருத்துவர் நாகேந்திரன், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் இனியன்தம்பி மற்றும் மூத்த தமிழறிஞர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் செ.கனகலட்சுமி, நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர். வீ.வேணுகுமார், நா.அய்யப்பன், நாகேஸ்வரி நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் முனைவர் .பாப்பா, ஏ.ஜெயாஎஸ்டிளின், நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப.ஆனந்தநாயகி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.